Friday 28 August 2015

பக்தனுக்காக சபதம் மீறிய கண்ணன்!

பக்தனுக்காக சபதம் மீறிய கண்ணன்!


 மகாபாரதப் போர் முடிந்தது. கிருஷ்ணன் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார். "ஸ்வாமி, தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள். இந்தப் பாவத்துக்கு நானும் காரணமாகிவிட்டேன். பாவம் போக்க என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.
இதற்கு பீஷ்மரே சரியானவர் என்று கூறி அவரிடம் அழைத்துச் சென்று, வந்த விவரத்தைச் சொன்னான் கண்ணன்.
பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்...
"ஏன் புது தெய்வத்தைத் தேடி வந்திருக்கிறாய்...? உன் அருகில் நிற்கிறானே கண்ணன்.... அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள்...
பத்தாவது நாள் யுத்தம். நான் கெüரவ சேனைக்குத் தலைமை தாங்கிப் புறப்படுகிறேன். அப்போது துரியோதனன் வந்தான். "ஓய் பாட்டனாரே! உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன், மகா பலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே... உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே.. நீர் கபடம் செய்கிறீர். எனக்குத் துரோகம் செய்கிறீர். இந்தப் பத்து நாள் யுத்தத்தில் நம் சேனைகளுக்குக் கடும் சேதம். இத்தனைக்கும் நீர் சேனாபதி. நாம் தோற்பதற்குக் காரணம் நீர். உமக்கு பாண்டவர்கள் மேல் பரிவு இருக்கிறது. உம் பிரிய பேரன்மார் பாண்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில் ஒன்றும் செய்யாமல் வந்துவிடுகிறீர்... உமக்கு இருப்பது பாண்டவர் மீதான பரிவு' என்று சொல்லி என்னைத் திட்டினான்.
"அஸ்தினாபுரத்தைக் காப்பேன்' என்று என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காத்து வரும் எனக்கு இப்படி ஒரு அவச்சொல் கேட்க சகிக்கவில்லை. அவன் சொன்ன வார்த்தைகளைச் சகிக்க மாட்டாமல் அவனிடம் ஒரு சபதம் செய்தேன். "இன்றைக்கு பாண்டவர்களுக்கும் கெüரவர்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் என்ன நடக்கிறது பார்.. நான் செய்யும் கோர யுத்தம் தாங்காமல், இந்தப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று சபதம் செய்த கிருஷ்ணனையே ஆயுதம் ஏந்தச் செய்கிறேன் பார்' என்று அவனிடம் சபதம் செய்தேன்.
அப்படியே நான் போர்க்களத்துக்கு வந்த வேகத்தில், துரியோதனன் நாவினால் என்னைச் சுட்ட வடு ஏற்படுத்திய கோபம்... வெறியோடு யுத்தம் செய்தேன். எதிரில் வந்தான் கண்ணன் அர்ஜுனனுடன்! அவன் மீது அம்பை எய்தேன். அவனை மட்டுமா அடித்தேன். விஷ்ணு பக்தனான நான் கண்ணனுக்கு சந்தனாபிஷேகம் செய்து திருப்பாதங்களைக் கழுவ வேண்டாமா..? அந்தப் போர்க்களத்தில் என்ன செய்தேன்...?
கண்ணன் மீது அம்பு பட்டு அவன் உடலிலிருந்து ஓடும் செங்குருதியால் அவன் பாதங்களை நனைத்து அபிஷேகம் அல்லவா செய்தேன். கிருஷ்ணனோ சிரித்துக் கொண்டிருந்தான்... ஆனால் நான் அடித்த அடியில் காண்டீபம் நழுவி மூர்ச்சையாகி விழுந்தான் அர்ஜுனன். பார்த்தான் கிருஷ்ணன். கையில் சக்ராயுதபாணியாக தேரிலிருந்து குதித்தான். அப்போது அவன் போட்டிருந்த மேல் வஸ்திரம் நழுவிக் கீழே விழுகிறது. அதைத் தாண்டிக் கொண்டு அவன் வருகிறான்.
நானோ, "அப்பா கிருஷ்ணா... அந்தப் பாவி துரியோதனன் போட்ட உப்பு போகட்டும். எனக்கு உன் சக்கரத்தால் மோட்சம் கிடைக்கட்டும்' என்று சொல்லிக்கொண்டு எதிர்கொண்டேன்.
அப்போது மயக்கம் தெளிந்து எழுந்தான் பார்த்தன். கையில் சக்கரத்தோடு என்னை நோக்கி ஓடி வந்த கண்ணனைக் கண்டான். உடனே கண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, "ஹே கிருஷ்ணா இந்தப் போரில் ஆயுதமெடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த நீ உன் சத்தியத்தை மீறலாமா?' எனக் கேட்டான்.
கண்ணன் சொன்னான்.... "என் சத்தியம் கிடக்கட்டும்... நீ செய்த சத்தியத்தை நான் காக்க வேண்டாமா? கிருஷ்ணன் பாதத்தில் நான் தஞ்சம்... அவன் என்னைக் காப்பான் என்றாயே... இப்போது இந்தக் கிழவன் உன் கதையை முடித்து விடுவான் போலிருக்கிறதே... நீ செய்த சத்தியத்தைக் காக்க என் சத்தியம் போனால் பரவாயில்லை...' என்று சொன்னான்.
அவர்கள் இருவர் பேசுவதும் என் காதில் விழுகிறது. உண்மையில் தர்மா... கிருஷ்ணன் தன் சத்தியத்தை மீறுவதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. அர்ஜுனன் சத்தியத்தைக் காப்பதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. காலையில் துரியோதனனிடம் நான் செய்தேனல்லவா ஒரு சத்தியம்... இன்று போர்க்களத்தில் கிருஷ்ணனையே ஆயுதம் எடுக்க வைக்கவில்லை என்றால் நான் கங்கையின் புத்திரன் இல்லை என்று. என்னுடைய அந்த சத்தியத்தைக் காப்பதற்காக, எனக்காக என் பிரபு ஆயுதம் எடுத்தான்..'' என்றார் பீஷ்மர் கண்களில் நீர் தளும்ப...

படித்து ரசித்து இன்புற்றது .........


Thursday 27 August 2015

சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?

சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?



சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.
கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று "வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி, இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி வெளியே வர வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும்.
கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோயிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

Above Information taken from 

செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய .....சில குறிப்புகள் ...

செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய .....சில குறிப்புகள் ...


1.வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
2.ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ).
3.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.
4.வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
5.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
6.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது
7.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
8.அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
9.செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
10.செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
11.நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
12.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது.
13.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது,சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
14.வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
15.ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .(குபேர காலம் )
16.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
17.தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18.செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
19.சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
20.சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
21.எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பம் / கல்கண்டு கொண்டு அணைக்கவேண்டும்.
22.வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
23.ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
24.வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
25.பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
26.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
27.தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
28.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப்படம் இவற்றை பார்க்கவேண்டும்
29.எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
30.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
31.வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும் .
32.எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
33.பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
34.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.இருகைகளும் கொண்டு தலையை சொரிய கூடாது .
35.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது,நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
36.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது,தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
37.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது.
38.தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
39.எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
40.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது,வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
41.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
42.குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.
43.எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
நன்றாக வாழ்ந்த தம்பதியர் சொன்னது ......

ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

Wednesday 5 August 2015

ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.



அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.
வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.
வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

உருத்திராக்கம் (ரூத்திராட்சம்) என்றால் ?

உருத்திராக்கம் என்றால் 


"உருத்திரர் + ஆக்கும் = உருத்திராக்கம்".
அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களும் பதினெட்டாம்படிக் கருப்புகளும் வழங்கியுள்ள இந்துவேதத்திற்கும் இந்துவேத மதமான இந்துமதத்திற்கும் உரிய
i. நாற்பத்தெட்டு வகைப்பட்ட கடவுள்களுக்கும்
ii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபடு நிலை யினர்களுக்கும்
iii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்களுக்கும்
iv. நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாளர்களுக்கும்
v. நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாளிகளுக்கும்
vi. நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாடு நாயகங்களுக்கும்
vii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாளர்களுக்கும்
viii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாளிகளுக்கும்
ix. நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாடு நாயகங்களுக்கும்
x. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஈசுவராச்சாரியார்களுக்கும்
xi. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிஈசுவராச் சாரியார்களுக்கும்
xii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சிவாச்சாரியார்களுக்கும்
xiii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிசிவாச் சாரியார்களுக்கும்
xiv. நாற்பத்தெட்டு வகைப்பட்ட பரமாச்சாரியார்களுக்கும்
xv. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிபரமாச் சாரியார்களுக்கும்
xvi. இதுவரை தோன்றியுள்ள நாற்பது சங்கராச்சாரியார்களுக்கும் (இனிமேல் தோன்றப்போகும் எட்டு சங்கராச்சாரியார்களுக்கும்)
xvii. இதுவரை தோன்றியுள்ள முப்பத்திரண்டு ஆதி சங்கராச்சாரியார்களுக்கும் (இனிமேல் தோன்றப்போகும் பதினாறு ஆதிசங்கராச்சாரியார்களுக்கும்)
xviii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட பத்தியாளர்களுக்கும்
xix. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சத்தியாளர்களுக்கும்
xx. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தியாளர்களுக்கும்
xxi. நாற்பத்தெட்டு வகைப்பட்ட முத்தியாளர்களுக்கும்
இந்த இருபத்தோரு அருளுலகத்தவர்களை வணங்கும் வண்ணமாகத்தான் இருபத்தோரு உருத்திராக்க மாலையையே அருளுலகப் பயிற்சி முயற்சியாளர்கள் முதன் முதலில் அணிந்துகொள்ளும் மரபு பதினெண்சித்தர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது;
அதாவது, மேலே பட்டியலிட்டுக் காட்டப்பட்ட இருபத்தோரு வகைப்பட்ட அருளுலகத்தவர்களும் பேசுகின்ற ஒரே ஒரு மொழிதான் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி.
பின்குறிப்பு : "மனிதரை கடவுளாக்க உதவுவது உருத்திராக்கம்" எனவே எல்லாரும் உருத்திராக்கம் அணியலாம்.

ஒலிகளுக்கும் உருவம் உண்டு...!

ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர்.



"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"

பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின. 

இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை ஞானம் கைவரப் பெற்றவர்கள் அறிந்திருந்தனர். பல சப்தங்களின் பிரதிபலிப்பே உலகம் என்பார்கள் அவார்கள்.


ஒரு பேரொளி இந்த பிரபஞ்சத்தையே நிரப்பி இருக்கின்றது. உலகம் முழுதும் ஒளி, உலகமெங்கும் ஒலி. ஆனால் சில ஒளி களைத்தான் நம் கண்கள் பார்க்கின்றன. சில ஒலிகளைத்தான் நம் காதுகள் கேட்கின்றன.

அனால் ஒலிகளுக்கும் உருவம் உண்டு அதையும் பார்க்கலாம் என்கிறார்கள் சித்தர்கள். ஒலியைக் கேட்கமுடியும், அது எப்படி பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா?

மந்திரங்கள் ஒலிவடிவானவை. அந்த மந்திரங்களை கண்ணால் கண்ட சித்தர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆக, கண்ணால் ஒலியைக் காண்பது சாத்தியம் என்கிறார்கள் அவர்கள்.

நம்முடைய விருப்பங்களைத் தெரிவிக்கவும், நம்முடைய வேலைகளைக் குறித்தும் நாம் பேசுகின்றோம். இந்தப் பேச்சொலி நாம் வாய் திறந்து பேசும் முன் எங்கிருந்தது? மனதில் எண்ணமாக இருந்தது. அதற்க்கு முன் எப்படி இருந்தது?

அது எண்ணங்களும், நினைவுகளுமாக முதலில் சூட்சும சப்தமாக இருந்தது. அதன் பிறகே வாய் மூலம் வெளிப்பட்டது. இந்த சப்தங்களை நான்கு வகையாகப்பிரிப்பர். அவை,

1, வைகரி - செவியோசை.

2, மத்திமை - கருத்தோசை.

3, பைசந்தி - நினைவோசை.

4, பரை - நுண்ணோசை, என்பவை ஆகும்.

நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் சொல்லாக ஒலி வடிவம் பெறுவதற்க்கு முன் சூட்சும ஒலியாய் இருந்தவையே.அந்த சூட்சும ஒலியையே ஓம் என்கிறார்கள் சித்தர்கள்.

ஆக, ஓங்காரம் மூல சப்தம் எல்லாமந்திரங்களுக்கும், ஒலிகளுக்கும் அதுவே ஆதாரம் என்கிறார்கள் சித்தர்கள்.

இது பற்றிய மேலும் விபரமாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்..

சித்தர்கள் கண்ட கோவிலும், மனிதர்கள் கட்டிய கோவிலும்..!

சித்தர்கள் கண்ட கோவிலும்,
மனிதர்கள் கட்டிய கோவிலும்..!



'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
-திருமூலர்.
நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை)வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.
"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- திருமூலர்.
என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,
"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!
என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.
உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).
கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
-வள்ளலார்.
குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-கருவூர் முனிவர்.
மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;
சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.
எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.
இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.
இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.
எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!
ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.

Tuesday 4 August 2015

சிவலிங்க வடிவம்...

சிவலிங்க வடிவம்


பிரம்மாண்டம் எனப்படும் சிவலிங்க வடிவம் தான் இறை வழிபாட்டிலேயே மிகவும் தொன்மையான வடிவமாகும். சிந்துவெளிப்பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க வடிவமே இதற்குச் சான்று . இந்தச் சிவலிங்க வடிவமானது மிகவும் வினோதமான அதிசயமான வடிவம். “Elliptical ” அதாவது “ அண்ட” வடிவமானது, சிவலிங்கம். முதல் எது, முடிவு எது எனக் கூற இயலாத வடிவம் “ஜோதி வடிவம்” என்றும் இதனைக் கூறுவர் . விளக்கினை ஏற்றினால் அதனின்று வரும் ஜோதி வடிவமானது ( jothi image) இப்படித்தான் இருக்கும். இதுவே சிவலிங்க வடிவமாகும். மணிவாசகரது குயில் பத்துப் பாடலில் ,
"கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கப்பால் சோதி மணிமுடி சொல்லில் சொல்லிறந்து நின்ற தொன்மை ஆதி குணம் ஒன்றுமிலான் அந்தமிலான் வரக்கூவாய் ”
என்கிறார். இப்பாடலில் ஜோதி வடிவம், தொன்மையான வடிவம், ஆதி குணமும் அந்தமில்லாத வடிவம் எனும் மூன்று குணங்களும் சிவனைக் குறிப்பன . சிவனின் வடிவமான சிவலிங்கத்தையும் குறிக்கும்.
"ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார் . ''பெரியவா ... ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம் . நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன் . அங்கெல்லாம், ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, ''அப்னே ஆப் ஹுவா !'' ன்னு தானாகவே உண்டானது. .. 'சுயம்பு' ன்னு சொன்னா ! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான். ஆனா, அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப் பட்டது இல்லயா .. . அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால , ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே. ..''
அதற்கு ஸ்வாமிகள், ''ஜ்வாலாமுகியை பார்த்திருக் கியா ?'' என்று கேட்டார். '' நான் பார்த்ததில்லை. ஆனால், அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம் !'' என்றார் அவர் .
அதற்கு ஸ்வாமிகள், '' சரிதான்.
ஆனா அங்கே ஒரு குண்டம்
மட்டு மில்லே. .. பல அக்னி
குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கும். அது
கந்தக பூமியானதால் அவ்வாறு
அமைந்திருக்கிறது. வடலூரில்
பூஜை எப்படி நடக்கிறது
பார்த்திருக்கிறாயா ?'' என்று
கேட்டுவிட்டு, அருகே இருந்த
கண்ணன் என்பவரிடம் அதைப்
பற்றிச் சொல்லச் சொன்னார் .
'வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து, அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள்'' என்றார் கண்ணன் . உடனே அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர். .. ''அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா ? மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே | அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம | அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும், நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும், மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது.. .
விளக்கு எரியும்போது
பார்த்திருக்கிறாயா ? அந்த
ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம்
பிரம்மாவின் நிறம். .. நடுவில்
கறுப்பு விஷ்ணுவின் நிறம் ...
மேலே சிவப்பு சிவனுடையது .
ஆகவே ஜோதி மும்மூர்த்தி
சொரூபம். சிவலிங்கமும்
அப்படியே. சாதாரணமாக
எல்லோரும் நினைப்பது போல,
அது சிவ சொரூபம்
மட்டுமல்ல. .. லிங்கத்தின்
அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப்
பீடம் விஷ்ணு பாகம். மேலே
லிங்கமாக இருப்பது சிவனுடைய
பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள்
அங்கங்கே ஜ்வாலாமுகி போல,
இயற்கையாய் ஏற்பட்ட
ஜோதியையோ , அல்லது
வடலூரில் இருப்பதுபோல
செயற்கையான தீப
ஜோதியையோ
வழிபட்டிருக்கிறார்கள் . அந்த
வழிபாடு தொடர்ந்து நடைபெற ,
அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை
செய்து ஜோதிர் லிங்கமாக
முன்னோர்கள் ஆராதித்தார்கள்.
ஜோதிதான் லிங்கம். ..
லிங்கம்தான் ஜோதி'' என விளக்கி,
ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்.
பன்னிரண்டு ஜோதி லிங்கங்கள்
1 . சோமநாதேசுவரர் - சோமநாதம் (குஜராத் )
2 . மல்லிகார்ச்சுனர்- ஸ்ரீசைலம் (ஆந்திரா )
3 . மகா காளேசுவரர் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம் )
4 . ஓம்காரம் மாமலேசுவரர் - ஓம்ஹாரம் ( மத்தியபிரதேசம்)
5 . வைத்திய நாதேசுவர் -பரளி (மகராஷ்டிரம்)
6 . பீமாநா தேசுவர் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)
7 . இராம நாதேசுவரர்- இராமேஸ்வரம் ( தமிழ்நாடு)
8 . நாக நாதேசுவரர்- நாகநாதம் (மகராஷ்டிரம்)
9 . விசுவ நாதேசுவரர் -காசி (உத்திரப்பிரதேசம் )
10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் ( மகாராஷ்டிரம் )
11. கேதாரேசுவரர் -இமயம் (உத்திரப்பிரதேசம் )
12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராஷ்டிரம் )
படித்தது..............

ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!

கருட பஞ்சமி சிறப்பு கட்டுரை !

கருட பஞ்சமி சிறப்பு கட்டுரை !

இறைவனை எப்படி வணங்குகிறோமோ அதுபோல இறைவனுடைய வாகனத்தையும் வணங்க வேண்டும். விஷ்ணு பகவானின் வாகனமான கருடனை வணங்கினால், அவர்களுக்கு திருமாலின் ஆசியும் அனுகிரகமும் கிடைக்கும். ஆம். ஸ்ரீமந் நாராயணனின் எல்லா அவதாரங்களிலும் கருடன், பெருமாளுக்கு உதவியாக இருந்தார். 




ஸ்ரீராமஅவதாரத்தில் மால்யவனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்தபோது, ஸ்ரீராமரின் மீது வெயில்படாமல் இருக்க, கருடபகவான் ஆகாயத்தில் தன்னுடைய  இரண்டு இறக்கைகளையும் விரித்து இராமரின் மீது வெயில்படாமல் காத்தார். 

அதேபோல கிருஷ்ணஅவதாரத்தில், ஸ்ரீகிருஷ்ணபகவான் காளிங்க நர்த்தனம் ஆடியபோது பெரிய கிரீடத்தை கொண்டுவந்து கிருஷ்ணபரமாத்மாவின் தலையில் வைக்க சென்றார். இதை கண்ட யசோதையும் – யாதவர்களும் “என்ன இது.? இந்த கருடன், பெரியதாக இருக்கும் கிரீடத்தை இந்த சின்ன குழந்தையின் தலையில் வைக்கச் செல்கிறதே. எப்படி கிரீடம் பொருந்தும்?” என்று நினைக்கும் போது, கருடன், பாசத்துடன் குழந்தை கிருஷ்ணனின் தலையில் அந்த கிரீடத்தை வைத்தவுடன் அந்த பெரிய கிரீடம், குழந்தை கண்ணனின் தலைக்கு ஏற்றதாக மாறி பகவானை அழகாக அலங்கரித்தது. கிரீடம் சிறியதாக மாறியதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். 

பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும்இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். 

முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை,  ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது,  பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். அத்துடன் நாகத்திற்கும் பூஜை செய்ய வேண்டும். இதனால் நாகதோஷத்தில் இருந்து விடுபட வழி பிறக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. நாகத்தையும் கருடபகவானையும் பூஜித்து அவர்களுடைய அருள் ஆசியை பெற்று பல்லாண்டு பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ்வாங்கு வாழ்வோம்.

ஸ்ரீ ராம ஜெயம்!

ஸ்ரீ ராம ஜெயம்!

ஸ்ரீ ராம ஜெயம்!

ஆடி கிருத்திகை

08.08.2015 ஆடி கிருத்திகை 



      சிவகிரி – சக்திகிரி என்ற இரண்டு மலைகளை சிவன் அகத்தியரிடம் வழங்கி, “இதை மருதமலையில் வைத்து விடு.“ என்றார். “குறுமுனியான நான் எப்படி இந்த இரண்டு மலைகளையும் சுமப்பேன்.?“ என்று சந்தேக கேள்வி எழுப்பினார் அகத்தியர். “பூமியை சமமாக வைத்த நீ, சாதாரண இரண்டு மலையை சுமக்க முடியாதா?. உன்னால் முடியாதது எதுவும் இல்லை அகத்தியா.“ என்று ஈசன் கூறினார். 
       
       பல பூதங்களுக்கு தலைவனான சிவபெருமான், அந்த சிவ பூதங்களை நம்பாமல் தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் என்றால், இதில் ஏதோ காரணம் இருக்கிறது.“ என்ற சிந்தனையுடன் சிவன் கொடுத்த சிவகிரி – சக்திகிரி மலையை சுமந்து வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் பாரம் தாங்காமல், “இந்த இரு மலைகளை எப்படி கீழே வைப்பது? யாராவது இருந்தால் கொஞ்சம் பாரத்தை இறக்கி வையுங்கள் என்று கூறலாமே இந்த பகுதியில் யாரையும் காணவில்லையே“ என்ற சிந்தனையோடு மலையின் பாரத்தை சுமக்க முடியாமல் சுமந்து நடந்து வந்தார் அகத்தியர். வரும் வழியில் இடும்பன் தவத்தில் இருந்தார். அவரை கண்டவுடன் மகிழ்ச்சியடைந்தார் அகத்தியர். “அசுரகுலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் நல்ல உள்ளம் படைத்தவன். சிறந்த சிவபக்தனும் கூட“ என்ற எண்ணத்தில் இடும்பன் அருகில் சென்று இடும்பனின் தவத்தை கலைத்து சடாசர மந்திரத்தை உபதேசித்தார் அகத்தியர். அசுரன் என்று கூட பாராமல் நல்ல உள்ளத்தோடு மந்திர உபதேசம் செய்யும் அகத்தியர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது இடும்பனுக்கு. 

      அப்போது அகத்தியரிடம் இரண்டு மலைகள் இருப்பதை கவனித்த இடும்பன், “கேட்பதற்கு தவறாக நினைக்க வேண்டாம். எதற்காக இரண்டு மலைகளை இப்படி சுமந்து செல்கிறீர்கள்?.“ என்றார் இடும்பன். இது சிவன் கொடுத்த மலைகள். இதனை மருதமலையில் வைக்க சொல்லி எமக்கு தந்த சிவ உத்தரவு. என்னால் இந்த மலைகளை சுமக்க முடியவில்லை. சிறிது தூரம் நீ சுமந்து கொண்டு வர முடியுமா?.“ என்றார் அகத்திய முனிவர். “இதை சுமக்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.“ என்று கூறிய இடும்பன், நீண்டு வளர்ந்த ஒரு மரத்தை வேருடன் பிடிங்கி,  மரத்தின் ஒரு முனையில் ஒரு மலையையும் மறுமுனையில் இன்னொரு மலையும் கட்டி, காவடி எடுப்பது போல் சுமந்து வந்தார் இடும்பன்.  வேகு தூரம்  நடந்து வந்த களைப்பால்  பழனியில் சிறிது நேரம் மலையை இறக்கி வைத்தார் இடும்பன். அப்போது வேடன் உருவத்தில் ஒரு சிறுவன் தோன்றி, அந்த இரண்டு மலைகளையும் திரும்ப எடுக்க முடியாத அளவு தன் கால்களால் பிடித்து வைத்திருந்தான். “பொடிப்பயல் இவன், நம்மிடமே வித்தை காட்டுகிறானா?“ என்ற கோபம் கொண்டு அந்த சிறுவனிடம் சண்டையிட்டார் இடுமபன். 

       சிறுவனாக இருந்தாலும் அவன் தந்த பதிலடியை தாங்க முடியாமல் இறந்தான் இடும்பன். இதை அறிந்த இடும்பனின் மனைவி இடும்பி, அகத்திய முனிவரிடம் சொல்லி கதறி அழுதாள். சிறுவன் உருவத்தில் வந்தது முருகன் என்பதை அறிந்த முனிவர், “நீ முருகனிடம் சென்றே நியாயம் கேள். அவர் கருனை செய்வார்.“ என்றார் அகத்தியர். 

       அதன்படி முருகனிடம் சென்று கண்ணீர் விட்டு கதறினாள் இடும்பி. இடும்பியின் வருத்ததை பார்த்து கருனை உள்ளத்துடன் இடும்பனை மீண்டும் உயிர் பெற செய்து தம்பதியினருக்கு ஆசி வழங்கினார். “இடும்பா… நீ சுமந்து வந்தது எனக்குரிய மலைகளைதான். நீ காவடி சுமந்து வந்த விதம் சிறப்பானது. இவ்வாறு பக்தர்கள் எனக்காக காவடி எடுத்து வரும் போது, “நீ அவர்களுக்கு துணையாக இருந்து காக்க வேண்டும்.“  

       காவடி எடுக்கும் பக்தர்கள் வாழ்வில் இன்னல்கள் இல்லாமல் இருக்க, நீயும் அவர்களுக்கு துணை இருக்க வேண்டும்.” என்றார் முருகப் பெருமான். ஆடி கிருத்திகை அன்று இடும்பனை போல் நாமும் காவடி எடுத்தால் கவலைகள் மறையும். “காவடி எடுத்தேன் கவலையை மறந்தேன்” என்று பக்தர்கள் சொல்வார்கள். அது உண்மையும் கூட. காவடி எடுக்கும் போது இடும்பன் நம்முடனே வருவார். முருகப்பெருமானின் ஆசியை நமக்கு அள்ளி தர இடும்பனும் நமக்காக கந்தனிடம் வேண்டுவார். 

       முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால், நம்முடைய கஷ்டத்தைஅந்த முருகப்பெருமானே சுமப்பார். வாழ்வில் ஒருமுறையாவது முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் இந்த பிறவியில் நாம் பெரும் பாக்கியசாலி. 

       முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களை அணிவித்து வணங்கினால் மிகவும் விசேஷமானது. ஆடி கிருத்திகை அன்று, முருகப்பெருமானுக்கு உகந்த ஆறுபடை வீடுகளில் ஒன்றையாவது தரிசியுங்கள். இயலாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகப்பெருமானின் திருக்கோயிலுக்கு சென்று வாசனை மலர்களை தந்து வணங்கினால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சு திறன் சிறப்பாக இருக்கும். நாம் அனைவரும் முருகப்பெருமானை வணங்கி நலங்களும் வளங்களும் பல பெற்று வளமோடு நலமோடு கந்தன் அருளால் சிறப்பு பெறுவோம். கந்தனுக்கு அரோகரா – முருகனுக்கு அரோகாரா – வேலனுக்கு அரோகரா!

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?
========================


>>மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.
>>இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக,
>>எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???
>>மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே....

ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!

ஈசன் அடிமை...

ஈசன் அடிமை...

உண்மைச் சம்பவம் சதுரகிரியில்
ஒரு பெண்மணி சதுரகிரி சந்தன மகாலிங்கத்தின் பெருமையைக் கேள்விப்பட்டு நீண்டநாளாக சதுரகிரிக்கு செல்ல விருப்பம் கொண்டிருந்தார். அவர் கணவரிடம் சதுரகிரியின் பெருமையைக்கூறி குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுத்தனர். பலர் கூறிய அறிவுரைகளின்படி மூன்று டார்ச் லைட்டுகளை புதிதாக வாங்கிக்கொண்டனர். இரவில் மலை ஏற ஆரம்பித்தனர். பாதி வழி சென்று கொண்டு இருக்கும்போது ஒருவர் வைத்திருந்த டார்ச் அணைந்து விட்டது. அதை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. இதே போல் மற்றவர்களின் டார்ச் விளக்கும் அணைந்து விட்டது. டார்ச் இல்லாமல் இனிமேல் பயணத்தை தொடர முடியாது. அதனால் இங்கேயே இப்படியே படுத்து தூங்கிவிட்டு காலையில் மலை ஏறுவோம் என்று முடிவெடுத்தனர். சற்று நேரம் கழித்து ஒருவர் யதார்த்தமாக டார்ச்சை அசைக்க எரிய ஆரம்பித்தது. அதே போல் மற்ற டார்ச் விளக்குகளும் பின் எரிய ஆரம்பித்தன. டார்ச் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தபோது சற்று தொலைவில் யானை கூட்டம் கடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களுடைய மகளிடம் சிவன் பெயரைச் சொல்லிக்கொண்டே வா. உனக்கு துணையாக இருப்பார் என்று அந்த அம்மணி சொல்ல அதறகு அந்தக்குழந்தை நான் எனக்கு பிடித்த நாயின் பெயரைத்தான் சொல்வேன் என்று அவர்கள் வீட்டு நாய்க்குட்டி பெயரைச் சொல்லியிருக்கிறாள். உடன் அங்கே ஒரு நாய்க்குட்டி வந்து விட்டது. அது அவர்களுடன் சந்தன மகாலிங்கம் கோவில் வரை துணையாக வந்திருக்கிறது.
பலருக்கு நாய் துணையாக வந்த அனுபவம் உள்ளது. சந்தனமகாலிங்கம் கோவில் அருகில் நாய்கள் நிறைய இருப்பதைக் காணலாம். ஆனால் நடு இரவில் வழிதெரியாமல் பயந்து தவிப்பவர்களுக்கு சரியான நேரத்தில் வந்து உதவுவதுதான் ஆச்சரியம். யானைக்கூட்டங்களிலிருந்து தங்களைக் காக்கவே ஈசன் தங்கள் டார்ச் விளக்குகளை அணைத்து தங்களைக் காத்துள்ளான் என்று ஆனந்தப்படுகிறார்கள்.

ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!

Monday 3 August 2015

காசியில் திதி கொடுப்பது எப்படி ?

காசியில் திதி கொடுப்பது எப்படி ?
முழுமையாக தந்திருகின்றேன் , பொறுமையாக படித்து பாருங்கள் .


அன்பின் உள்ளங்களே, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள்.
நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் அல்லது திதி கொடுக்க மறந்திருந்தால் வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமையான ஒரு சூழல் அதாவது காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்யமுடியாத நிலையும் ஏற்படும். இந்த நிலை அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் பல்வேறு, மாறுபட்ட, வெவ்வேறு விஷயங்களாக வெளிப்படும்.
இதனை பித்ரு தோஷம், பித்ரு சாந்தி என்று சொல்வார்கள்.
திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய மூதாதையரின் (இறந்தபின் எரித்த) சாம்பலை வைத்து கொடுக்கபடுவது.
இப்போது ஒருவர் தனது மூதாதையருக்கு திதி கொடுக்க எண்ணுகிறார். அவருக்கு அவரது மூதாதையரின் சாம்பல் எங்கிருந்து கிடைக்கும். ? இறந்து பல வருடங்கள் கழிந்த பின் எங்கே போவது சாம்பலுக்கு ?
அதனால் அவர் காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் சென்று அவரிடம்,
ஐயா, நான் காசிக்கு சென்று எனது மூதாதையருக்கு திதி கொடுக்கப் போகிறேன், எனக்கு மூதாதையரின் சாம்பல் வேண்டும் அதனால் இங்கு அவர்களுக்கு திதி கொடுத்து மண் வாங்க வந்துள்ளேன் என்று சொல்லி திதி தர வேண்டும்.
அவர்கள் சம்பிரதாயப்படி எல்லாம் செய்து அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று கை மண் எடுத்து அதனை ஒன்றாக்கி பிறகு அதனை மூன்று சம பாகமாக்கி ஒன்று மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதாதையர் என பிரித்து அதற்கு பூஜை செய்து மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்களை அங்கேயே அக்னி தீர்த்தத்திலேயே விட்டு விட்டு நமது மூதாதையர் பாகமான மணலை மட்டும் ஒரு துணியில் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.
இந்த மணலை வீட்டுக்கு கொண்டு சென்று காசிக்கு புறப்படும் நாள்வரை மலர் (பூ) வைத்து பூஜை செய்யவேண்டும்.
இந்த நாட்களில் உறவினர் இறந்தால் இருப்பது போல துக்கம் அனுஷ்டிக்கவேண்டும்.
இந்த மணல் காய்ந்தபின் பார்த்தால் இடுகாட்டு சாம்பலுக்கு சற்றும் மாறாமல் இருக்கும்.

2. காசி யாத்திரை தொடங்கும் நாளில் நீங்கள் திதி கொடுக்க இருக்கும் நாளின் நட்சத்திரம், திதி, நாம் திதி கொடுக்க இருப்பவர் பெயர், அவருக்கு நாம் என்ன உறவு என்பது போன்ற விபரங்களுடன் இந்த மணல், தேன் 50Ml , பச்சரிசி மாவு 250g, எள் Rs.3.00 ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது நாம் திதி கொடுக்க தயார்.
முதலில் அலகாபாத் செல்ல வேண்டும் அங்குள்ள த்ரிவேணி சங்கமத்தில்தான் இந்த மணலை விடவேண்டும்.
திதி கொடுப்பவர் இங்கே முடியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்). பின்னர் குளித்து விபூதி சந்தனம் பூசிக்கொண்டு ஒரு படகில் ஏறி கங்கை,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு சென்று அங்கு மிக ஆழமாக இருக்கும் அதனால் படகுகளை இணைத்துக்கட்டி ஒரு திறந்தவெளி பாத்ரூம் போல அமைத்திருப்பார்கள்.
அங்கே நாம் சென்று இறங்கி இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு அந்த மணலில் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு, அதில் சிறிது பூவை வைத்து வருடம், மாதம், அன்றைய கிழமை, அன்றைய திதி, அன்றைய நட்சத்திரம், தான் இன்னார் மகன் அல்லது மகள், திதி தருபவருக்கு என்ன உறவு போன்றவைகளை சொல்லி என்னால் கொடுக்கப்படும் இந்த திதியை ஏற்று அவர்களின் ஆன்மாவை கைலாயத்திற்க்கோ வைகுண்டத்திற்கோ சேர்த்து ஆன்மாவிற்கு விடுதலை தரவேண்டும் தாயே என்றவாறு
அந்த மணலை கையில் ஏந்தி நம் தலையில் வைத்து கங்காதேவி, யமுனாதேவி, சரஸ்வதி தேவியை நினைத்து மனமுருகி வேண்டி அப்படியே நீரில் மூழ்கி விட்டு விடவேண்டும்.
( நம் தலையில் நேரடியாக மணலை வைக்கக்கூடாது, மணல் நம் தலையில் படக்கூடாது, கையில் வைத்து மூடிக் கொள்ளவேண்டும்).
இப்படியே நமது அத்தனை உறவினர்களுக்கும் ஒவ்வொருவராக சொல்லி சொல்லி மணலை த்ரிவேணி சங்கமத்தில் கரைக்க வேண்டும்.
நினைவில் இல்லாதவர்களுக்கும் இறுதியில் எனது வம்சம்,எனது தாயார் வம்சம், எனது தந்தையார் வம்சம் எல்லோருக்கும் என்று சொல்லி விட்டு விடலாம். நமக்கு விரோதமான சொந்தமாக இருந்தாலும் இங்கே கோபம் பாராட்டாமல் விரோதம் பாராட்டாமல் கொடுக்கவேண்டும்.
ஆத்மாக்களுக்கு சொந்தமில்லை நாமெல்லோரும் உறவுகளே !!!
எல்லோருக்கும் கொடுத்து முடித்தவுடன் நன்றாக குளித்துவிட்டு படகில் ஏறி இன்னும் கொஞ்சம் நதியின் உள்ளே சென்று ஒரு கேன் அல்லது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் த்ரிவேணி தீர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்து நாம் செல்வது வாரனாசி எனப்படும் காசி மாநகரம்.
இரண்டாவது கட்டமாக நமது திதி கொடுக்கும் நிகழ்வில் நாம் இப்போது அலகாபாத்தில் இருந்து சுமார் 220km தொலைவில் இருக்கும் வாரணாசிக்கு வந்துவிட்டோம். கங்காதேவி இங்கு ஆர்ப்பரித்து ஆனந்தமாக பாய்ந்து செல்கிறாள். இங்கேதான் பல ஆயிரம் முனிவர்களும் மகரிஷிகளும் தினசரி அரூபமாக வந்து ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசிப்பதாக வாரனாசி க்ஷேத்ர புராணம் கூறுகிறது.
மேலும் எம்பெருமான் சிவன் கேதார்நாத்தில் இருப்பதை காட்டிலும் காசியில் இருப்பதை விரும்புகிறார் என்கிறது.
இங்கே நாம் கங்கையில் ஆனந்தமாக நீராடி (நமது அன்னையின் மடியில் தவழ்வதுபோல்) மகிழ்வுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கே சாஷ்ட்டாங்கமாக வீழ்ந்து தண்டனிடவேண்டும். ( நமஸ்கரிக்கவேண்டும் ) அப்போது நாம் “ ஐயனே எனக்கு தெரிந்தவகையில் எனது மூதாதையருக்கு என்னால் ஆன வகையில் திதி தந்துள்ளேன். பெருமான் அதனை ஏற்று எனது மூதாதையரின் ஆன்மாக்களை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ எது அவர்களின் இருப்பிடமோ அங்கு சேர்க்க வேண்டும் என்று மனதில் ஆழமாக சிந்தித்து தண்டனிட வேண்டும் என்பார் பெரியோர்கள்.
இங்கு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருமேனியில்(சிவலிங்கத்தில்) நமது சிரம் வைத்து வணங்கி வேண்டுதல் செய்யலாம். இங்கு பார்க்க வேண்டிய கோயில்கள் ஏராளம், ஏராளம். ஸ்ரீ அன்னை அன்னபூரணி, ஸ்ரீ காசி விசாலாட்சி, ஸ்ரீ மகாகால பைரவர் என நிறைய கோயில்கள் உள்ளன. சந்திரமுகி, அரிச்சந்திரா கட்டம் என நிறைய படித்துறைகள் உண்டு. கங்கை கரை ஓரங்களில் முதலைகள் உண்டு. ஜாக்கிரதை.
அடுத்து நாம் செல்லவேண்டியது கயா எனும் நகரம்.
மூன்றாவதாக நாம் செல்ல இருப்பது கயாசுரன் எனும் அரக்கனால் நமக்கு கிடைத்த “பித்ரு பிண்டார்ப்பன ஸ்தலம்”
இங்கு நாம் ஒரு தமிழ் தெரிந்த ஐயரை பார்த்து பேசிக் கொள்ள வேண்டும். ( இரயில்வே ஸ்டேஷனிலேயே நம்மை அவர்கள் மடக்கி விடுவார்கள்.) நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் காசு கறந்து விடுவார்கள்.
இங்கு பல்குனி எனப்படும் ஆறு ஓடுகிறது. அதில் குளித்து விட்டு வந்து விடவேண்டும். ஐயர் நம்மிடம் எள், பச்சரிசி மாவு, தேன் தந்து அதனை கலக்கி பிசைந்து தயார் செய்ய சொல்வார், நாம் வைத்துள்ள எள், தேன், பச்சரிசி மாவுடன் அதையும் சேர்த்து நிறைய மாவாக்கி அதனை பிசைந்து கொள்ளவேண்டும்.
அதனை மூன்று பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் முப்பத்திரண்டு சிறு சிறு உருண்டைகளாக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தனித்தனியாக நம்மிடம் மூன்று முப்பத்திரண்டு உருண்டைகள் உள்ளது.
நாம் நிர்மாணித்த ஐயர் மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்வார், பிறகு நம்மிடம் நமக்கு மிகவும் பிடித்த ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் இவைகளை நமது மூதாதையருக்காக இனி பயன்படுத்தமாட்டேன் என்று விட்டுவிட சொல்வார்.
சரி என்று நாம் ஏதாவது ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் விடவேண்டும். அதனை நாம் என்றுமே உண்ணவே கூடாது.
(நான் எனக்கு மிகவும் பிடித்தமான ஆப்பிளை விட்டேன், மிகவும் ருசித்து உண்ணும் பாகற்காயை விட்டேன், இலை ஆலமரத்தின் இலையை விட சொன்னார்கள் விட்டேன்.)
ஒன்று.
முதல் முப்பத்திரண்டு உருண்டைகளை பல்குனி ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், மீன்களுக்கு உணவாகும்.

இரண்டு
இரண்டாவது முப்பத்திரண்டு உருண்டைகளை கயாசுரன் மார்பில் மகாவிஷ்ணுவின் ஒரு பாதம் மீது ஒவ்வொரு உருண்டையாக நமது உறவினர்களின் பெயரைச் சொல்லி சொல்லி விட வேண்டும், அப்போதும் நாம் “எம்பெருமானே! என்னாலான வகையில் எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், இதனை மனமுவந்து ஏற்று அவர்களின் ஆன்மாவை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ அங்கு அழைத்துச் செல்வாயாக” என்று மனமுருக வேண்டிக் கொண்டே ஒவ்வொன்றாக அந்த திருவடியின் மீது விடவேண்டும்.

மூன்று
மூன்றாவது முப்பத்திரண்டு உருண்டைகள் கோயிலுள்ளே இருக்கும் ஆலமரத்தின் வேர்களில் இடவேண்டும். (இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி ஸ்ரீகாசியம்பதியிலும் , கடைசிப்பகுதி (கயாவழியாக - கயாசுரன் வேண்டுதல்படி- படிக்க : கயாசுரன்-கதை) இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.
நாம் திதி தரமறந்தாலோ, தராமல் இருந்தாலோ அவர்களால் கீழேயேதான் இருக்கமுடியும், மேலேறும் மற்ற ஆன்மாக்களைப் பார்த்து அழுதுகொண்டிருப்பர்கள், இங்கே அவர்கள் அழ அழ நாம் அங்கே மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாவோம் என்பார்கள், அந்த ஆன்மாக்களின் உறவுகளின் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே இவனாவது நமக்கு திதி தந்து மேலேற்றுவானா என்று எண்ணுவார்களாம்.
நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.
இதனை அலகாபாத்தில் முண்டம் (முடிஎடுத்தல் ) காசியில் தண்டம் (சுவாமியை தண்டனிடுதல்) கயாவில் பிண்டம் (பிண்டார்ப்பணம் செய்தல் ) என்பார்கள்.
பின்னர் அங்குள்ள ஒரு ஐயரை அழைத்து நாம் நிர்மாணித்த ஐயர் கேட்பார் “ இவர்களின் மூதாதையர் சொர்க்கம் சென்று விட்டார்களா? அவர்கள், ஆம், சென்று விட்டார்கள், நமது ஐயர், அவர்கள் இவர்களின் செய்கையினால் சந்தோஷப்பட்டார்களா? அவர்கள், ஆம், மிகவும் சந்தோஷப்பட்டார்கள், நமது ஐயர், சரி, இவர்களை ஆசீர்வதியுங்கள்.
அந்த ஐயர், உங்கள் உறவினர்கள் சார்பில் உங்களை ஆசிர்வதிக்கிறேன்,
உங்கள் செய்கையினால் அவர்கள் மிக சந்தோஷம் அடைந்து சொர்க்கம் சென்றார்கள். உங்களுக்கு ஆசீர்வாதம், இனி நன்றாக இருங்கள், என்று சொல்வார்கள் . இதற்கு “சொஸ்தி சொல்வது” என்பார்கள்.
அடுத்தது நாம் செல்ல இருப்பது இராமேஸ்வரம்.
நாம் அடுத்து மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும், இராமேஸ்வரம் வந்து நாம் அலகாபாத்தில் நாம் எடுத்த தீர்த்தத்தை கோயிலில் கங்கா அபிஷேகம் என்று சொல்லி இரசீது போட்டு அதனை இங்குள்ள கோயில் ஐயரிடம் தரவேண்டும், அவர் உங்களை உள்ளே அமரச்செய்து உங்கள் கங்கை நீரினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை நீங்கள் காணச்செய்வார்.
அப்போது நீங்கள் “ ஐயனே என் அறிவுக்கு தெரிந்தவாறு எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், அதனை ஏற்று அவர்களை நின் மலர்ப்பதத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் அங்கே வரும் கோடித் தீர்த்தம் பிடித்து வந்து வீட்டில் எல்லோருக்கும் தரவேண்டும். வீட்டிலும் வைத்துக்கொள்ளலாம். காசியிலும் கங்காதீர்த்தம் பிடித்து வந்து வைத்துக் கொள்ளலாம். கங்காதீர்த்தம் வீட்டில் இருப்பது நன்றாகும்.
இப்படியாக இராமேஸ்வரத்தில் துவங்கி இராமேஸ்வரத்திலமுடிகிறது மூதாதையருக்கு திதி தரும் காசி யாத்திரை.
ஸ்ரீஅலகாபாத், ஸ்ரீகாசி மாநகரம், ஸ்ரீகயா நகரம் இங்கெல்லாம் மலர்கள் மணப்பதில்லை, காகம், பல்லிகள் சப்தமெழுப்புவது இல்லை, மாடுகள் முட்டுவதில்லை, பிணம் எரியும் வாடை வருவதில்லை.
காரணம் என்ன ? அங்கு லட்சோப லட்சம் முனிவர்களும் ரிஷி பெருமக்களும் தவமியற்றிகொண்டே இருக்கின்றார்கள். அவர்களின் தவம் கலைந்து விடக்கூடாதென்று எண்ணியே எம்பெருமான் கருணை கொண்டு அருளியதே காரணம்.
காசி யாத்திரை செல்லுங்கள், மூதாதையருக்கு திதி கொடுங்கள். அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி நீங்கள் சந்தோஷமாகுங்கள் , உங்கள் சந்ததிகளுக்கும் நல்வழி அமைத்துக் கொடுங்கள் .

*வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.*

நமது உண்மையான சக்திகள்...

                                                                   நமது உண்மையான சக்திகள்...
SUPERHERO-கள் திரையில் சண்டையிடும் கற்பனை கட்சிகளை மெய்மறந்து பார்கிறோமே .. உண்மையான நம் கற்பனைக்கும் எட்டாத அளவு சக்திகளை கொண்டு வாழ்துள்ளனர் நாம் முன்னோர்கள் ..

அவற்றுள் சில...
அணிமா -
அணுவை விட சிறிய அளவில் உருவத்தை சுருக்கி கொள்வது மற்ற சிறு உயிரினங்கள் உள்ளே செல்வது ..
மகிமா - உருவத்தை நம் கற்பனைக்கு எட்டாத அளவு பெரிதாக்கி கொள்வது . பிரபஞ்ச அளவிற்கு கூட உருவத்தை பெரிதாக்க முடியுமாம் .
லகிமா - பெரிய உருவத்தில் இருந்தாலும் எடையை மிகவும் குறைவாக ஆக்கிகொள்வது .
கரிமா - சிறிய உருவத்தில் இருந்தாலும் உடலின் எடையை மலை போல் கூட்டி கொள்வது .
ப்ராப்தி - அசைகள் அனைத்தையும் நினைத்த நொடியில் அடைவது . நினைத்ததை நினைத்த நொடியில் அடைவது .
ப்ரகாஸ்யம் -இருந்த இடத்தில் இருந்துகொண்டு ஆத்மாவை மட்டும் நினைத்த இடத்திற்க்கு எடுத்து செல்வது
இஸ்திவம் - கடவுளின் நிலையை அடைவது பஞ்ச பூதங்கள் , பிரபஞ்ச பொருட்கள் அனைத்தையும் கட்டு படுத்துவது .
வசிதவம் - அரசர்கள் மற்றும் கடவுள்களையே கட்டுக்குள் வைப்பது .. இயற்க்கையை நினைத்த படி மாற்றி அமைப்பது .
ஒரு சாதாரண மனிதனால் நினைத்துகூட பார்க்கமுடியாத விஷயங்கள் இவை .வெளிநாட்டு மோகத்தால் அனைத்தையும் இழந்துவிட்டு திரையில் போதிதர்மர் சண்டையிடுவதை பார்த்து கைதட்டிவிட்டு வருகிறோம் .

கடவுளை காட்டுங்கள்...

                                                  கடவுளை காட்டுங்கள்...
நாமதேவருடைய குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் சைதன்யனும் ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும் புத்திசாலியாக இருந்த சைதன்யனை குருவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே, தனக்குக் தெரிந்த அனைத்தையும் நாமதேவன் சைதன்யனுகுக் கற்றுக் கொடுத்தார். குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற சைதன்யனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று.

ஒரு நாள் நாமதேவர் அவனை அழைத்து, "மகனே நீ கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டுவிட்டாய். இத்துடன் குருகுலவாசம் உனக்கு போதும். நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத் தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத் துணை இருப்பார்," என்று வாழ்த்தினார்.

தனது குருவை தரையில் விழுந்து வணங்கிய சைதன்யன் அவரிடம் பணிவாக, "குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப் பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும் எனக்குக் காட்டவில்லையே! கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத் துணை இருப்பார்?" என்று வினவினான்.

"சைதன்யா உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள காட்டின் வழியே சுசந்த நகர் எனும் நகரத்தைத் தாண்டி பவானிபுரத்திற்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து அவனுடைய சேமலாபங்களை விசாரித்துக் கொண்டு வா?" என்றார்.

"அப்படியே செய்கிறேன் குருவே", என்று பதிலளித்தான் சைதன்யன். குருவின் மனைவி கொடுத்த உணவுப் பொட்டலங்களுடன், மறுநாள் காலையில் கிளம்பினான் சைதன்யன்.




நண்பகல் நேரம் காட்டு வழியில் பாதியைக் கடந்து விட்டான். அப்போது அவனுக்கு மிகவும் தாகம் உண்டாயிற்று. இந்தக் காட்டில் குடிக்கத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று தேடிய அவன் கண்களில் ஒரு வயதான பார்வையற்ற மனிதன் தென்பட்டான். அவன் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப் பார்த்துப் பின் அதை முகர்ந்து பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்கொண்டான்.

"ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டான்.

"நான் இந்தக் காட்டில் வசிப்பவன். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு வழங்குகிறேன். குருடன் என்பதால், முகர்ந்து பார்த்து மூலிகைகளைக் கண்டுபிடிக்கிறேன்," என்றான்.

"இப்போது நீங்கள் பறித்துக் கொண்டிருப்பது என்ன மூலிகை?" என்றான்.

"இது பாம்புக் கடிக்கான மூலிகை. இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில் விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில் சுற்றுகிறாயே... இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள்," என்று சில இலைகளைக் கொடுத்தான்.

அவற்றை பத்திரமாக வைத்துக்கொண்ட சைதன்யன், "ஐயா, குடிக்க தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான்.

"அருகில் ஒரு கிணறு உள்ளது!" என்று கிணறு இருக்கும் இடத்தைக் காட்டினான்.

அந்தக் கிணற்றை அடைந்து தாகம் தீரத் தண்ணீர் குடித்தபின், ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான் சைதன்யன். அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக் கண் விழித்த சைதன்யன் கண்களில் வேகமாக ஓடும் ஒரு முயல் தென்பட்டது.

திடீரென மரத்தில் ஏதோ சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர் தப்பினான் சைதன்யன்.

அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த சைதன்யன் இருட்டும் நேரத்தில் சுசாந்த நகரை அடைந்தான். அங்கு பசியால் வாடிய ஒரு பிச்சைக்கார குடும்பத்திற்கு எஞ்சிய உணவுகளை கொடுத்துவிட்டு அன்று இரவு ஒரு சத்திரத்தில் தங்கினான்.

நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சைதன்யன் தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனிதனின் வாயில் நுரைதள்ள முனகிக் கொண்டிருபதைப் பார்த்தான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தான். அந்த மனிதனின் அபாய நிலையை உணர்ந்த சைதன்யன் உடனே தன்னிடமிருந்த விஷக்கடி மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அந்த மனிதனின் வாயில் விட்டான். சற்று நேரத்திற்க்கெல்லாம் அவன் சாதாரண நிலையை அடைந்தான்.

அந்த நபர் யாருமல்ல! குடிமக்களின் குறைகளை அறிய மாறுவேடம் பூண்டு இரவில் திரிந்த அந்த நாட்டு மந்திரி.

சைதன்யனுக்குத் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த மந்திரி, "நீ என் உயிரைக் காப்பாற்றினாய். அதற்க்கு செய் நன்றியாக உனக்கு மன்னரிடம் வேலை வங்கித் தருகிறேன்," என்றார்.

"மிகவும் நன்றி ஐயா. ஆனால், நான் முக்கிய அலுவலகமாக பவானிபுரம் சென்று கொண்டிருக்கிறேன். சில தினங்கள் கழித்து உங்களை சந்திக்கிறேன்," என்று கூறி மந்திரியிடமிருந்து விடைப் பெற்றுக்கொண்டான்.

மறுநாள் காலை பவானிபுரத்தை அடைந்து குருவின் சகோதரரை சந்தித்து சேமலாபங்களை விசாரித்து அறிந்து, பிறகு தன் குருவிடம் திரும்பினான் தான் சென்று வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும் விளக்கிக் கூறினான்.

"மகனே, நினைவிருக்கிறதா? கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகக்திற்கு நான் ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்து விட்டது. கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா?" என்றார்.

"நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்? பார்க்கவில்லையே!" என்றான் ஆச்சரியத்துடன் சைதன்யன்.

"மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். ஆனால், ஒரே உருவத்தில் அவர் உனக்குத் தோன்றவில்லை," என்றார்.

"எந்த குருட்டு முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான மூலிகை தந்தாரோ, அவர் கடவுள். காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்ப்படும் என்று எண்ணி, யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும் கடவுள் தான். உன்னுடைய உயிரைக்காப்பற்றிய முயலும் கடவுள் தான். எந்த மந்திரியை பாம்புக் கடியிலிருந்து நீ பிழைக்க வைத்தாயோ, அவருக்கு நீ கடவுள். இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்?" என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து உணர்ந்ததும் சைதன்யனுக்கு ஞானோதயம் உண்டாயிற்று. தனக்கு ஞானோதயம் உண்டு பண்ணிய குருவை விழுந்து வணங்கி விட்டு, அவரிடமிருந்து விடை பெற்றான்.

இதற்குப் பிறகு சைதன்யன் தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு சுசாந்த நகரை அடைந்து மந்திரியை சந்தித்தான். மந்திரியின் உதவியால் அவனுக்கு அரசாங்கத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.